Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அதிமுகவைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் தினகரனுடன் தொடர்பில் இருப்பதால் அவர்களை தகுதிநீக்கம் செய்யவேண்டுமென, கடந்த வெள்ளிக்கிழமை அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் புகைப்பட ஆதாரங்களுடன் மனு அளித்தார்.
இந்த மனுவை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார். மூன்று பேரிடமும் விளக்கம் கேட்டு கடந்த செவ்வாய்கிழமை நோட்டீஸ் அனுப்பினார். ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காகத்தான் அந்த மூன்று எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்ய முயற்சிக்கின்றனர் என திமுக குற்றம் சாட்டியது. மேலும், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு அளித்தார்.
இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவேண்டும் என மனு அளித்துள்ளதே என்ற கேட்டதற்கு, கொண்டு வரலாம் என்று பதிலளித்தார். 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது குறித்து கேட்டதற்கு, அது அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் என்று பதிலளித்தார். இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நான்கு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.